டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் பணவீக்க வீதம் மேலும் வீழ்ச்சியடையும் நிதி அமைச்சர் தெரிவிப்பு.

 

டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் பணவீக்க வீதம் மேலும் வீழ்ச்சியடையும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். 

டிசம்பருக்குள் முன்னைய நிலையில் இருந்து ஒற்றை இலக்கத்திற்கு பணவீக்கம் கொண்டு வரப்படும் என இதன்போது அவர் சுட்டிக்காட்டினார். 

அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும்  தெரிவிக்கையில்,

சில மாதங்களுக்கு முன்னர், அதிக பணவீக்க நிலைமைகளின் போது, ​​எமது நாடு உலகில் ஐந்தாவது இடத்தில் இருந்தது.

ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, அதிக பணவீக்க விகிதத்துடன் ஐந்தாவது நாடாக நமது நாடு பட்டியலிடப்பட்டிருந்தது. இது ஒரு தீவிரமான சூழ்நிலை. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் அந்தப் பட்டியலில் இருந்து இலங்கையை பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது.

நமது நாட்டில் 95% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் தற்போது 60% ஆகக் குறைந்துள்ளது, அதே சமயம் 70% ஆக இருந்த சராசரி பணவீக்கம் 50%க்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்த விவரங்கள் மூலம், பல சிரமங்களை எதிர்கொண்டு மிக விரைவாக தன்னை மீட்டெடுக்கும் ஒரு நாடாக இலங்கையை அடையாளப்படுத்த முடியும்.

இலங்கை மத்திய வங்கியும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாராட்டியுள்ளதுடன், இந்த டிசம்பருக்குள் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு குறையும் என கூறியுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.